181. அறங்கூறான்
அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல்
இனிது.
பொருள்: அறத்தைப் பேசாதவன், கேடுதரும்
செயல்களில் ஈடுபடுபவன் என்றாலும்கூட, பிறரைப் பற்றிப் புறம் பேசாது இருந்தால் அது
அவனுக்கு நன்மை பயக்கும்.
தொடைநயம்: இணை மோனை, அடி இயைபு.
அறங்கூறான், புறங்கூறான் வினையாலணையும்
பெயர்கள்.
182. அறனழீஇ
அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப்
பொய்த்து நகை.
பொருள்: ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப்
பற்றிப் புறம்பேசிவிட்டு, அவரைக் கண்டதும் அவரிடம் பொய்யாகச் சிரித்துப் பேசுவது,
அறத்தைப் பழித்துத் தீய வழியில் நடப்பதைக் காட்டிலும் கேடானது.
அறனழீஇ – புறனழீஇ, அல்லவை செய்தல் – பொய்த்து
நகை. இவற்றை நிரல்நிரையாகக் கொள்ள வேண்டும்.
தொடைநயம்: இணைமோனை, அடி இயைபு.
அறனழீஇ, புறனழீஇ-சொல்லிசை அளபெடைகள்.
183. புறங்கூறிப்
பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம்
தரும்.
பொருள்: காணாதபோது ஒன்றும், கண்டால்
இன்னொன்றுமாகப் புறங்கூறிப் பொய்யாக வாழ்வதைவிட, இறந்துபோதல், அறநூல்களில்
சொல்லப்பட்ட நன்மைகளை அவனுக்கு வழங்கும்.
அறம்-ஆகுபெயர்.
தொடைநயம்: அடி எதுகை.
184. கண்ணின்று
கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று
பின்நோக்காச் சொல்.
பொருள்: ஒருவரின் குறைகளைப் பற்றிக்
கடிந்துரை்ப்பதென்றாலும், அதை அவரது முகத்துக்கு முன்னே செய்ய வேண்டும். அவர்
இல்லாத இடத்தில் பின்விளைவுகளைச் சிந்திக்காமல், அவரைப் பற்றிப் புறம்
சொல்லக்கூடாது.
குறளில் முரனணி பயின்று வந்துள்ளது.
கண்ணற-இரக்கம் இல்லாமல்.
சொல்லற்க - வியங்கோல் வினைமுற்று.
தொடைநயம்: இணைமோனை.
185. அறஞ்சொல்லும்
நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால்
காணப் படும்.
பொருள்: அறத்தைப் பற்றி விதந்தோதும்
ஒருவன், நெஞ்சத்தால் அறம் அற்றவன் என்பதை, அவன் புறம் பேசுகிற கீழ்மையால்
அறியலாம்.
புன்மை-கீழ்மை.
தொடைநயம்: ஒரூஉ இயைபு, பொழிப்பு மோனை.
186. பிறன்பழி
கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து
கூறப் படும்.
பொருள்: பிறரைப் பற்றிப் புறம் சொல்பவனின்
பல தீச்செயல்கள் ஆராயப்பட்டு, அவனுடைய குற்றங்கள் பலமாகப் பேசப்படும்.
தொடைநயம்: பொழிப்பு எதுகை, அடி எதுகை.
187. பகச்சொல்லிக்
கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா
தவர்.
பொருள்: சிரித்துப் பேசி, நட்பைப்
பேணிக்கொள்ள தெரியாதவர், புறங்கூறும் தன் இயல்பால், நண்பர்களையும் பகைவர்களாக
மாற்றிவிடுவர்.
தொடைநயம்: ஒரூஉ இயைபு.
188. துன்னியார்
குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல்
ஏதிலார் மாட்டு.
பொருள்: நெருங்கிப் பழகியவர்களின் தவறுகளையே
அவர்கள் இல்லாத இடத்தில் பிறரிடத்தில் பேசத் துணிந்தவர்கள், அவர்களுக்குத் தொடர்பில்லாதவர்களைப்
பற்றி என்னவெல்லாம் பேசமாட்டார்கள்?
துன்னியார் – நெருக்கமானவர்கள்.
தொடைநயம்: பொழிப்பு மோனை.
189. அறன்நோக்கி
ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல்
உரைப்பான் பொறை.
பொருள்: ஒருவர் இடத்தைவிட்டு நிங்கியமை கண்டு,
அவரைப் பற்றிப் புறம் சொல்பவரையும் இந்த நிலம் கைவிடாது சுமக்கிறதே, அதன் காரணம், இத்தகைய
கொடியவர்களையும் கைவிடாது சுமப்பதே தனக்கு அறம் என்று நிலம் நினைப்பதாலோ என்னவோ!
பொறை – பொறுமை, சுமை.
தொடைநயம்: ஒரூஉ இயைபு, இணைமோனை.
190. ஏதிலார்
குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ
மன்னும் உயிர்க்கு.
பொருள்: பிறருடைய குற்றங்களைக் கண்டு புறம்பேசுபவர்கள்,
தன்னைத்தான் உற்றுநோக்கி, தன்னிடம் இருக்கிற குற்றங்களைக் களைய முயன்றால், அவர்களின்
ஆன்மாவுக்கு எவ்வித தீங்கும் நேராது, நிம்மதியான வா ழ்வை வாழலாம்.
ஏதிலார் – பிறர்.