Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Wednesday, July 9, 2025

அறத்துப்பால்: இல்லறவியல்: 08 விருந்தோம்பல்

81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

பொருள்: மனைவி, மக்கட்செல்வம், பொருட்செல்வத்தையும் பெற்று இல்வாழ்க்கை நடத்துவதன் நோக்கம், வருகின்ற விருந்தினர்களுக்கு உதவ வேண்டும் என்பதே.

அக்காலத்தில் உண்டிச்சாலையோ, விடுதிகளோ இல்லையென்பதால் தமிழர்களின் ஒவ்வொரு வீடும் விருந்தோம்பலை ஓர் நெறியாகப் போற்றின என்கிறார் தேவநேயப் பாவாணர்.

விருந்து-பண்பாகு பெயர்.

தொடை நயம்: ஒரூஉ இயைபு, ஒரூஉ எதுகை, இணைமோனை.

 

82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

பொருள்: விருந்தினரை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு, நாம் தேவர்கள் உண்ணும் அமுதத்தையே உண்டாலும், அது சாவைத் தடுக்கும் மருந்தே ஆனாலும், அப்படி உண்பது விரும்பத் தக்க செயல் அல்ல.

தொடை நயம்: அடி எதுகை

 

83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று.

பொருள்: விருந்தினர்களை நாள்தோறும் வரவேற்றுப் போற்றுபவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் பாழ்படுவது இல்லை.

வைகல்-நாள்தோறும், பரு-துன்பம்.

வருவிருந்து-வினைத்தொகை.

தொடை நயங்கள்: ஒரூஉ மோனை, அடி எதுகை, அடி இயைபு.

 

84. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.

பொருள்: விருந்தினராய் வருபவர்களை முகமலர்ச்சியோடு வரவேற்றுப் போற்றுபவனின் இல்லத்தில், திருமகள் மனமகிழ்ச்சியோடு தங்குவாள்.

அகனமர்தல்-மன மகிழ்ச்சி, முகனமர்தல்-முகமலர்ச்சி.

செய்யாள்-திருமகள்.

தொடை நயங்கள்: ஒரூஉ இயைபு, ஒரூஉ எதுகை.

 

85. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.

பொருள்: விருந்தினரைப் போற்றி, உணவளித்தபின் எஞ்சியவற்றை உண்பவனின் நிலத்தில் விதைத்துத்தான் அறுவடை செய்ய வேண்டுமா என்ன?

மிச்சில் உணவுக்கலத்தில் எஞ்சுவது, எச்சில் இலையில் எஞ்சுவது எனப் பாவாணர் தரும் விளக்கம் சுவையானது.

தொடைநயம்: ஒரூஉ மோனை.

 

86. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு.

பொருள்: வந்த விருந்தினர்களை உபசரித்து, அவர்களை வழியனுப்பிவிட்டு,  இனி வரப்போகும் விருந்தினர்களை எதிர்நோக்கியிருப்பவன், தனது அடுத்த பிறவியில் வானத்தவர்களுக்கு நல்ல விருந்தினனாய் இருப்பான்.

செல்விருந்து, வருவிருந்து-வினைத்தொகைகள், நல்விருந்து-பண்புத்தொகை.

தொடைநயங்கள்: முரண்தொடை, அடி எதுகை, அடி இயைபு.

 

87. இனைத்துணைத்து என்பது ஒன்றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்.

பொருள்: விருந்தோம்பல் என்கிற வேள்வியின்  பயன் இவ்வளவு என நிச்சயமாக அளவிட முடியாது. அது வந்த விருந்தினரின் பண்புடைமையைப் பொறுத்தது.

 

88. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.

பொருள்: விருந்தோம்பல் என்னும் வேள்வியில் ஈடுபடாமல், நிலையில்லாத பொருட்செல்வத்தைப் பேணிப் பாதுகாத்துப் பின்  இழப்பவர்கள், “வாழ்வின் பற்றுக்கோட்டை இழந்துவிட்டோமே” என வருந்துவர்.

தொடை நயங்கள்: இணைமோனை, ஒரூஉ இயைப்உ.

 

89. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.

பொருள்: விருந்தோம்பல் என்னும் பண்பில்லாதவர்கள் பெருஞ்செல்வம் உடையவர்களாக இருந்தாலும், அவர்கள் வறுமையில் இருப்பவர்களே. அத்தகைய மனவறுமை பேதையர்களிடமே உண்டு.

தொடை நயம்: முரண்தொடை.

 

90. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.

பொருள்: முகர்ந்து பார்த்தால் அனிச்சமலர் வாடிவிடும். அதுபோல,விருந்தினரை மாறுபட்ட முகத்துடன் நோக்கிக் கடுமை காட்டினால், அவர்களும் வருத்தம் கொண்டு மனம் வாடிவிடுவர்.

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது. 

அறத்துப்பால்: இல்லறவியல் 08. அன்புடைமை

71. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்.

பொருள்: ஒருவர் மீதான நம்முடைய அன்பை எத்தனை திட்டமிட்டு மறைத்துவைத்தாலும், அவர்களுக்குத் துன்பம் ஒன்று நேரிடும்போது, நம் கண்கள் நம்மை மீறியும் கண்ணீர் சிந்தி அவர்மீதான நமது அன்பை அம்பலப்படுத்திவிடும்.

துன்பமான மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக புன்கணீர் என வள்ளுவர் கூறினாலும், கண்களை ஒத்த நம் அன்பிற்குரியவர்களை நெடுநாளைக்குப் பின் சந்திக்க நேர்ந்தால், நம் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரியும் என்கிற பாவாணரின் விளக்கமும் சுவையானது.

தொடை: மேல்க்கதுவாய் மோனை, அடி எதுகை.

72. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.

பொருள்: உள்ளத்தில் அன்பில்லாதவர்கள், எல்லாப் பொருட்களையும் தமதாக்கிக்கொண்டு வாழ்வார்கள். அன்புடையவர்கள், தமது உடலையும் பிறருக்காக வழங்கும் இயல்புடையவர்களாகத் திகழ்வார்கள்.

என்பு என்ற சொல் எலும்பைக் குறித்தாலும், இங்கு உடலைக் குறித்து வந்துள்ளதால், இது சினை ஆகுபெயர்.

தொடை: ஒருவு இயைபு/மோனை/எதுகை, அடி எதுகை.

73. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.

பொருள்: உயிருக்கு உடலோடு இருக்கிற தொடர்பால் பெற்றதே  நம் வாழ்வு. எனவே அதன் உண்மையான பயன் என்பது, அன்போடு இணைந்த செயலாக அமைதல் வேண்டும் என்கிற கலைஞரின் விளக்கம் நுட்பமும் எளிமையும் இனிமையும் கொண்டது.

தொடை: ஒரூஉ மோனை, அடி எதுகை, அடி இயைபு.

74. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

நண்பென்னும் நாடாச் சிறப்பு.

பொருள்: உறவினரிடம் நாம் காட்டும் அன்பின் நீட்சியாய், நாம் எல்லோரிடத்திலும் அன்பு செய்யத் தொடங்கிவிடுவோம். இத்தகைய வழக்கத்தைக் கைக்கொண்டால், நாம் தேடிச் செல்லாமலேயே நமக்கு நட்புகள் அமையும். அந்த நட்புகளின் மூலமாக நாம் விரும்பியவற்றை அடைய இயலும்.

நாடாச் சிறப்பு என்ற சொல்லுக்கு, வருந்தித் தேடாமல் நாம் அடையும் சிறப்பு என்கிற பாவாணரின் விளக்கம் மிகப் பொருத்தமானது.

நண்பு: நட்பு என்பதன் இடைப்போலி,

நாடாச் சிறப்பு: ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

தொடை: கீழ்க்கதுவாய் மோனை, ஒருவு இயைபு.

75. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு.

பொருள்: உலகில் சிறப்போடும் புகழோடும் வாழ்ந்தவர்கள் யார் எனில், அவர்கள் தங்கள் அன்றாடத்தை அன்பால் நிறைத்துக்கொண்டவர்களே.

தொடை: இணைமோனை, அடி எதுகை.

76. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை.

பொருள்: கொடை முதலான அறச்செயல்களுக்கே அன்பு துணையானது என்று சொல்பவர்கள், போர் முதலான வீரச்செயல்களுக்கும் அதுவே துணை என்பதை அறிய மாட்டார்கள்.

அறியார்: வினையால் அணையும் பெயர்.

தொடை: கீழ்க்கதுவாய் மோனை, அடி எதுகை.

77. என்பி லதனை வெயில்போலக் காயுமே

அன்பி லதனை அறம்.

பொருள்: எலும்பில்லாத உடல்கொண்ட பூச்சி புழுக்களை வெயில் சுட்டெரிக்கும். அதுபோல அன்பில்லாத உயிர்களை அறம் பொசுக்கும்.

போல என்ற உவம உறுபு வெளிப்படையாக வந்துள்ளமையால், இக்குறளில் உவமையணி பயின்று வந்துள்ளது.

தொடை: அடி எதுகை/இயைபு.

78. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந்தளிர்த் தற்று.

பொருள்: உள்ளத்தில் அன்பில்லாத உயிர்களின் அன்றாடம் என்பது, பாலைவனத்தில் பட்டுப்போன மரம் ஒன்று தளிர்த்ததற்குச் சமமானது. அதாவது, பட்டமரம் தளிர்க்காது, அன்பில்லாத வாழ்வும் சிறப்பேதும் அடையாமல் கெட்டழியும்.

அற்று என்கிற உவம உறுபு வெளிப்படையாகத் தோன்றியுள்ளதால், குறளில் பயின்றுள்ளது உவமை அணியாகும். வன்பாற்கண் என்ற சொல் வன்மையான பாலையிடத்தில் என்ற பொருள் தரும். கண் ஏழாம் வேற்றுமை உறுபு என்பதை நினைவில் கொள்ளவும்.

தொடை: ஒருவு எதுகை.

79. புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

பொருள்: கண்ணுக்குப் புலப்படாத அகத்தின் உறுப்பாகிய அன்பு இல்லாவிட்டால், காண்பதற்குப் புலனாகிற  புறத்தின் உறுப்புகளான கை, கால், கண், மூக்கு, செவி, வாய், மெய் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் செயல்களால் என்ன பயன் விளையும்?

இல்லறம் என்கிற அக வாழ்வுக்கு உறுப்பாகிய அன்பு இல்லாதவனுக்கு தன் புற வாழ்வின் உறுப்புகளான இடம், பொருள், ஏவல் ஆகியவை எப்படி அவன் விரும்பிய பயன்களை அவனுக்கு வழங்கும்? என இரண்டு வகைகளில் வினாக்கள் எழுப்பிப் பொருள் காணுகிறார்கள். இரண்டுமே பொருத்தமானதும் சுவையானதும்தான்.

தொடை: அடி இயைபு.

80. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

பொருள்: உயிரோடு கூடிய உடல் என்பது அன்பின் வழிப்பட்டதாகும். அது இல்லாத உயிர்களின் உடல்கள், எலும்புகளைத் தோலால் போர்த்திய வெற்றுடம்பே ஆகும். அதாவது பிணத்திற்குச் சமம்.

தொடை: ஒருவு மோனை, அடி எதுகை. 

Thursday, July 3, 2025

பொருட்பால்: அரசியல்: 55. செங்கோன்மை

541. ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்து செய்வஃதே முறை.

பொருள்: நன்கு ஆராய்ந்து, எந்தப் பக்கமும் சாயாமல், குற்றம் இன்னதென்றும், அதற்கான தண்டனைகள் இவை எனவும் உரிய அறிஞரோடு ஆராய்ந்து நீதி செய்வதே செங்கோன்மையாகும்.

தொடைநயம்: அடி இயைபு.

 

542. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழுங் குடி.

பொருள்: உலக உயிர்கள் அனைத்தும் வானத்திலிருந்து பெய்ய்உம் மழையை எதிர்பார்த்து உயிர்வாழும். அதுபோல, மன்னனின் செங்கோலை நோக்கியே மக்களின் வாழ்வு அமையும்.

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

தொடைநயம்: இணைமோனை, அடி இயைபு.

 

543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.

பொருள்: அந்தணர்களால் போற்றி ஓதப்படும் மறைநூலுக்கும், அது வலியுறுத்தும் அறத்துக்கும் முதன்மையாய் இருப்பது மன்னனின் முறைதவறாத செங்கோல்தான்.

தொடைநயம்: மேல்க்கதுவாய் மோனை.

 

544. குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.

பொருள்: தனது மக்களை அரவணைத்து, நடுவுநிலைமை தவறாது ஆட்சி செய்கிற மன்னவனின் அடியைப் பின்பற்றி மக்கள் நடப்பர்.

தழீஇ-இன்னிசை அளபெடை,

கோல், உலகு-ஆகுபெயர்கள்.

தொடைநயம்: அடி இயைபு.

 

545. இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையுளும் தொக்கு.

பொருள்: நீதிமுறை தவறாது, செங்கோன்மையுடன் ஆட்சிபுரியும் மன்னவனின் நாட்டில் மழையும் விளைச்சலும் குன்றவே குன்றாது.

பெயல்-மழை.

தொடைநயம்: அடி எதுகை.

 

546. வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉங் கோடா தெனின்.

பொருள்: ஒரு மன்னனுக்கு வெற்றி தருவது அவன் கையிலிருக்கும் வேல் அல்ல. நீதிமுறை தவறாமல் ஆட்சி செய்யும் செங்கோல்தான். அது எப்போதும் வளையாது இருக்க வேண்டும்.

வென்றி – வெற்றி,

கோடாது – வளையாது.

தொடைநயம்: அடிமோனை/எதுகை.

 

547. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.

பொருள்: மன்னன் மக்களைக் காப்பான். மன்னவனை அவன் முறைதாழாது மேற்கொண்ட ஆட்சிமுறை காக்கும்.

தொடைநயம்: மேல்க்கதுவாய் இயைபு, அடி எதுகை.

 

548. எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும்.

பொருள்: அணுகுதலில் எளிமையும், நீதி தவறாமல் ஆட்சி செய்வதுமே மன்னனுக்கு அழகு. இதிலிருந்து தவறும் மன்னவனுடைய நாடு எதிரிகள் இல்லாமல் தானே அழியும்.

தொடைநயம்: அடி இயைபு.

 

549. குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்.

பொருள்: தன்னுடைய மக்களைப்பிறர் வருத்த அனுமதிக்காமலும், தானும் அவர்களைவருத்தாமல் பேண வேண்டும். அதேசமயம், , அவர்களிடம் குற்றம் கண்டவிடத்து, அவர்களைத் தண்டிப்பது அரசனுக்குக் குற்றமாகாது. அது அரசனது தொழில்.

வடு – குற்றம்.

தொடைநயம்: பொழிப்பு மோனை.

 

550. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்.

பொருள்: கொலை உள்ளிட்ட குற்றங்களைச் செய்பவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்குதல், பயிர்களிடையே வளர்கின்ற களைகளைப் பறித்தலுக்கு ஒப்பானதாகும்.

குறளில் உவமையணி பயின்று வந்துள்ளது.

பைங்கூழ் – பசும்பயிர்.

தொடைநயம்: இணைமோனை. 

Wednesday, July 2, 2025

பொருட்பால்: அரசியல்: 58. கண்ணோட்டம்

571. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு.

பொருள்: அருள்நோக்கு ஒன்று இருப்பதால்தான் இந்த உலகம் அழியாமல் இயங்கிவருகிறது.

காரிகை – அன்பு நிறைந்த பெண்.

தொடைநயம்: மேல்க்கதுவாய் மோனை, அடி எதுகை.

 

572. கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்

உண்மை நிலக்குப் பொறை.

பொருள்: உலகியல் இயங்குவதற்குக் கண்ணோட்டம் என்கிற அருள்நோக்கே காரணமாகும். அத்தகைய கண்ணோட்டம் இல்லாதவர்கள் இந்த நிலத்துக்குச் சுமையே ஆவார்கள்.

பொறை – சுமை.

தொடைநயம்: அடி எதுகை.

 

573. பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

பொருள்: பாடலுக்குப் பொருத்தமில்லாத ராகத்தால் பயனில்லை. அதுபோல, அன்பு, இரக்கம் இல்லாத கண்களால் எந்த ஒரு பயனுமில்லை.

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

தொடைநயம்: ஒரூஉ இயைபு, அடி எதுகை.

 

574. உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண்.

பொருள்: அன்பும் இரக்கமும் கொண்ட அருள்நோக்கு இல்லாத கண்கள், முகத்தில் இருக்கின்றன என்பதைத் தவிர வேறு என்ன நன்மை பயக்கும்?

தொடைநயம்: ஒரூஉ எதுகை

 

575. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்

புண்ணென்று உணரப் படும்.

பொருள்: அருள்நோக்குப் பார்வையே கண்ணுக்குச் சிறந்தஆபரணமாகும். அது இல்லையென்றால், அந்தக் கண்கள் வெறும் புண்கள் என்றே கருதப்படும்.

தொடைநயம்: பொழிப்பு மோனை/எதுகை, அடி எதுகை.

 

576. மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு

இயைந்து கண்ணோடா தவர்.

பொருள்: அருள்நோக்கு இல்லாத கண்களை உடையவர்கள், மரத்துக்கு ஒப்பானவர்களே.

குறளில் உவமையணி பயின்று வந்துள்ளது.

தொடைநயம்: பொழிப்பு மோனை, ஒரூஉ எதுகை/இயைபு.

 

577. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.

பொருள்: அருள்நோக்கு இல்லாதவர்கள் கண் இல்லாதவர்களே. கண் உடையவர்கள் எவரும் கண்ணோட்டம் இல்லாமல் இருப்பது இல்லை.

தொடைநயம்: மேல்க்கதுவாய் மோனை/எதுகை, கீழ்க்கதுவாய் இயைபு, அடி இயைபு.

 

578. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்திவ் வுலகு.

பொருள்:தன்னுடைய கடமைக்கு ஊறு நேராத அன்பும் இரக்கமு் கொண்ட அருள்நோக்கு உடையவர்களுக்கே இந்த உலகம் உரிமையுடையது.

தொடைநயம்: பொழிப்பு மோனை.

 

579. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப்

பொறுத்தாற்றும் பண்பே தலை.

பொருள்: தம்மை வருத்த நினைப்பவரிடத்திலும் அன்பும் இரக்கமும் கொண்ட அருள்நோக்கோடு இருத்தலே சிறந்த பண்பாகும்.

ஒறுத்தாற்றல் – வருத்துதல்.

தொடைநயம்: அடி இயைபு.

 

 580. பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.

பொருள்: அருள்நோக்கு உடைய பண்பாளர்கள், தம்மோடு பழகியவர்கள் தம் கண் முன்னே தனக்கு நஞ்சு கலந்து கொடுத்தாலும் அதை வாங்கி அருந்திவிட்டு, அவர்களோடு இயல்பாகப் பேசி மகிழ்ந்திருப்பார்கள்.

தொடைநயம்: ஒரூஉ எதுகை. 

Saturday, June 28, 2025

பொருட்பால்: அமைச்சியல்: 73. அவை அஞ்சாமை

721. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.

பொருள்: சொற்களின் வலிமை அறிந்த கற்றவர்கள், அவையின் தன்மையை உணர்ந்து, பொருந்தாத சொற்களைப் பேசமாட்டார்கள்.

தொடைநயம்: கூழை மோனை, அடி எதுகை.

 

722. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்

கற்ற செலச்சொல்லு வார்.

பொருள்: கற்றவர்களிடம் தான் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும்படியாக உரைக்கத் தெரிந்தவர் கற்றவரினும் மேம்பட்டவர் ஆவார்.

தொடைநயம்: கீழ்க்கதுவாய் மோனை/எதுகை, அடிமோனை/எதுகை.

குறளில் சொற்பொருள் பின்வரு நிலையணி பயின்றுவந்துள்ளது.

 

723. பகையகத்துச் சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சா தவர்.

பொருள்: போரிட்டு உயிரிழக்கத் துணிந்தவர் உலகில் பலருண்டு. ஆனால், அவையில் வாதிட்டு வெற்றிபெறத் துடிப்பவர் சிலரே ஆவார்.

தொடைநயம்: கூழை இயைபு, அடி இயைபு.

குறளில் முரண் அணி பயின்று வந்துள்ளது.

 

 

724. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற

மிக்காருள் மிக்க கொளல்.

பொருள்: கற்றறிந்த சான்றோரிடம், அவர் மனம் கொள்ளும் வகையில் தான் கற்றதைச் சொல்வதோடு, அந்தக் கற்றவர்களிடம் இருக்கும் கூடுதல் அறிவைப் பெற்றுக்கொள்வதும்அவை அஞ்சாமை ஆகும்.

தொடைநயம்: இணைமோனை

 

725. ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா

மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

பொருள்: அவையில் அஞ்சாமல் விவாதிப்பதற்கு, இலக்கண முறைப்படி சொற்களையும், தர்க்கவியலையும் கற்றுத் தெளய வேண்டும்.

தொடைநயம்: பொழிப்பு எதுகை, அடி எதுகை.

 

726. வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்

நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

பொருள்: வீரமற்றவர்க்கு வாளினால் என்ன பயன்? அதுபோல, அவையில் பேச அஞ்சும் நுன்னறிவு அற்றவர்களுக்கு நூலினால் என்ன பயன்?

தொடைநயம்: ஒரூஉ இயைபு.

எடுத்துக்காட்டு உவமையணி குறளில் பயின்று வந்துள்ளது.

 

727. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து

அஞ்சு மவன்கற்ற நூல்.

பொருள்: அவைக்கு முன்னே அஞ்சுபவன் கற்ற நூல், படைக்களத்தில் கோழை கையில் உள்ள வாளுக்குச் சமமானது.

தொடைநயம்: ஒரூஉ இயைபு

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

 

728. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்

நன்கு செலச்சொல்லா தார்.

பொருள்: அறிஞர்கள் நிறைந்துள்ள அவையில் அவர்கள் மனங்கொள்ளும்படி ஒன்றை விளக்கத் தெரியாவதன், என்ன கற்றிருந்தாலும் பயனில்லை.

தொடைநயம்: பொழிப்பு மோனை, ஒரூஉ எதுகை.

 

729. கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்

நல்லா ரவையஞ்சு வார்.

பொருள்: ஆன்றோர் நிறைந்த அவையில், நல்ல நூல்களைக் கற்று, அவற்றின் நற்பொருளை அறிந்தும்கூடப் பேச அஞ்சுபவர்கள், கல்லாதவரைவிடத் தாழ்ந்தவர்களே.

தொடைநயம்: மேல்க்கதுவாய் எதுகை, அடி இயைபு.

 

730. உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.

பொருள்: தாம் கற்றறிந்த் ஒன்றை அவைக்கு அஞ்சி, வெளிப்படுத்தாமல் இருப்பவர், உயிர்வாழ்ந்தும் இறந்தவர்க்குச் சமமானவரே.

தொடைநயம்: ஒரூஉ எதுகை.

 

  

பொருட்பால்: அரசியல்: 60. ஊக்கமுடைமை

591. உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று.

பொருள்:  மனதில் ஊக்கம் கொண்டவர்களே உடையவர்கள் அதாவது செல்வந்தர்கள் எனப்படுவார்கள். அது இல்லாதவர்கள் வேறு எதைக் கொண்டிருந்தாலும் இல்லாதவர்கள் என்றே கருதப்படுவார்கள்.

தொடைநயம்: அடிமோனை/எதுகை

உடையர்-வினையாலணையும் பெயர்.

 

592. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும்.

பொருள்: எந்த ஒரு சூழலிலும் மனதை விட்டுவிடாமல் அதன் ஊக்கம் குன்றாமல் காப்பவனுக்கு அதுவே செல்வமாகும். மற்ற பொருளுடைமை எல்லாம் என்றேனும் ஒருநாள் அழிந்துபோகும்.

தொடைநயம்: கூழை மோனை/இயைபு.

 

593. ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்.

பொருள்: மன உறுதிகொண்டவர்கள், தங்களது செல்வத்தை இழந்தாலும் கலங்கமாட்டார்கள்.

ஆக்கம் – செல்வம்,

கைத்துடை – கையிருப்பு.

தொடைநயம்: ஒரூஉ இயைபு.

 

594. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்கம் உடையான் உழை.

பொருள்: செல்வமானது, தளராத ஊக்கம் உடையவனின் முகவரியைத் தேடிக்கொண்டு தானே அவனிடம் போய்ச்சேரும்.

அதர்வினாய் – தானாக,

அசைவிலா – தளராத.

தொடைநயம்: அடி இயைபு.

 

595. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு.

பொருள்: நீர் மட்டத்தின் அளவைப் பொருத்தே தாமரையின் அடித்தண்டு வளர்ச்சி அமையும். அதுபோல, மக்களின் உள்ள உயர்வுக்கு ஏற்ப அவர்களின் பிற உயர்வுகள் அமையும்.

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

வெள்ளம் – நீர்.

தொடைநயம்: அடி இயைபு.

 

596. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

பொருள்: எப்போதும் உயர்வான எண்ணங்களைக்கொண்டிருக்க வேண்டும். அந்த உயர்வான எண்ணங்களால் நமக்குப் பெரிதாக எந்த ஒரு நன்மையும் நடந்துவிடவில்லை என்றாலும், உயர்வாக எண்ணுதலைக் கைவிடக்கூடாது.

உள்ளுதல் – நினைத்தல்.

தொடைநயம்: பொழிப்பு மோனை, அடி எதுகை.

 

597. சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பில்

பட்டுப்பாடு ஊன்றுங் களிறு.

பொருள்: போர்க்களத்தில் உடல் முழுக்க அம்புகள் துளைத்து உட்சென்று வலியை ஏற்படுத்தியபோதும், யானை தன் ஊக்கத்திலிருந்து தளராமல் போரிடும். அதுபோல, தங்களுக்கு அழிவு வந்தவிடத்திலும் ஊக்கம் உடையவர்கள் தங்கள் ஊக்கத்தைக் கைவிடமாட்டார்கள்.

குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.

புதையம்பு – அம்புக்கட்டு,

களிறு – யானை.

தொடைநயம்: ஒரூஉ எதுகை.

 

598. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

வள்ளியம் என்னும் செருக்கு.

பொருள்: உள்ளத்தில் ஊக்கம் அதாவது மனநிறைவு இல்லாதவர்கள், கொடுக்கும் எண்ணம் அற்றவர்களாகவே இருப்பார்கள். அதனால், அவர்கள் தங்களைப் பெரும் வள்ளல்கள் என்று செருக்கோடு சொல்லிக்கொள்ள இயலாது.

வள்ளியம் – கொடைத்தன்மை.

தொடைநயம்: ஒரூஉ மோனை, அடி எதுகை.

 

599. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை

வெரூஉம் புலிதாக் குறின்.

பொருள்: பெரிய உடல், கூரிய கொம்புகளைக் கொண்டிருந்தாலும், யானை புலியைக் கண்டால் அஞ்சி ஓடும். அதுபோல, தன்னைவிட உடல் வலிமை குறைந்தவர்கள், உள்ள ஊக்கத்தில் தன்னையும் விஞ்சியவர்கள் என்றால், அவர்களுக்கு அஞ்சித்தான் ஆக வேண்டும்.

குறளில் வேற்றுப்பொருள் வைப்பணி (பிறிது மொழிதல்) பயின்று வந்துள்ளது.

பரியது – வலிமையானது,

கூர்ங்கோடு – கூரிய கொம்பு,

வெரூஉம் – அஞ்சும்.

வெரூஉம்-இன்னிசை அளபெடை.

 

600. உரமொருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார்

மரம்மக்கள் ஆதலே வேறு.

பொருள்: உள்ளத்தில் ஊக்கத்தோடு இருப்பதே ஒருவருக்கு வலிமையாகும். அத்தகைய ஊக்கம் இல்லாதவர்கள், உருவத்தில் மனிதர்கள் என்றாலும், மரத்துக்கே ஒப்பாவார்கள்.

உரம் – வலிமை,

வெறுக்கை – ஊக்கம்.

தொடைநயம்: இணைமோனை, அடி எதுகை.