81. இருந்தோம்பி
இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை
செய்தற் பொருட்டு.
பொருள்: மனைவி, மக்கட்செல்வம்,
பொருட்செல்வத்தையும் பெற்று இல்வாழ்க்கை நடத்துவதன் நோக்கம், வருகின்ற
விருந்தினர்களுக்கு உதவ வேண்டும் என்பதே.
அக்காலத்தில் உண்டிச்சாலையோ, விடுதிகளோ
இல்லையென்பதால் தமிழர்களின் ஒவ்வொரு வீடும் விருந்தோம்பலை ஓர் நெறியாகப் போற்றின
என்கிறார் தேவநேயப் பாவாணர்.
விருந்து-பண்பாகு பெயர்.
தொடை நயம்: ஒரூஉ இயைபு, ஒரூஉ எதுகை,
இணைமோனை.
82. விருந்து
புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும்
வேண்டற்பாற் றன்று.
பொருள்: விருந்தினரை வீட்டிற்கு வெளியே
நிறுத்திவிட்டு, நாம் தேவர்கள் உண்ணும் அமுதத்தையே உண்டாலும், அது சாவைத்
தடுக்கும் மருந்தே ஆனாலும், அப்படி உண்பது விரும்பத் தக்க செயல் அல்ல.
தொடை நயம்: அடி எதுகை
83. வருவிருந்து
வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து
பாழ்படுதல் இன்று.
பொருள்: விருந்தினர்களை நாள்தோறும்
வரவேற்றுப் போற்றுபவனுடைய வாழ்க்கை, துன்பத்தால் பாழ்படுவது இல்லை.
வைகல்-நாள்தோறும், பரு-துன்பம்.
வருவிருந்து-வினைத்தொகை.
தொடை நயங்கள்: ஒரூஉ மோனை, அடி எதுகை, அடி
இயைபு.
84. அகனமர்ந்து
செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து
ஓம்புவான் இல்.
பொருள்: விருந்தினராய் வருபவர்களை
முகமலர்ச்சியோடு வரவேற்றுப் போற்றுபவனின் இல்லத்தில், திருமகள் மனமகிழ்ச்சியோடு
தங்குவாள்.
அகனமர்தல்-மன மகிழ்ச்சி,
முகனமர்தல்-முகமலர்ச்சி.
செய்யாள்-திருமகள்.
தொடை நயங்கள்: ஒரூஉ இயைபு, ஒரூஉ எதுகை.
85. வித்தும்
இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில்
மிசைவான் புலம்.
பொருள்: விருந்தினரைப் போற்றி,
உணவளித்தபின் எஞ்சியவற்றை உண்பவனின் நிலத்தில் விதைத்துத்தான் அறுவடை செய்ய
வேண்டுமா என்ன?
மிச்சில் உணவுக்கலத்தில் எஞ்சுவது, எச்சில்
இலையில் எஞ்சுவது எனப் பாவாணர் தரும் விளக்கம் சுவையானது.
தொடைநயம்: ஒரூஉ மோனை.
86. செல்விருந்து
ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து
வானத் தவர்க்கு.
பொருள்: வந்த விருந்தினர்களை உபசரித்து,
அவர்களை வழியனுப்பிவிட்டு, இனி வரப்போகும்
விருந்தினர்களை எதிர்நோக்கியிருப்பவன், தனது அடுத்த பிறவியில் வானத்தவர்களுக்கு
நல்ல விருந்தினனாய் இருப்பான்.
செல்விருந்து, வருவிருந்து-வினைத்தொகைகள்,
நல்விருந்து-பண்புத்தொகை.
தொடைநயங்கள்: முரண்தொடை, அடி எதுகை, அடி
இயைபு.
87. இனைத்துணைத்து
என்பது ஒன்றில்லை விருந்தின்
துணைத்துணை
வேள்விப் பயன்.
பொருள்: விருந்தோம்பல் என்கிற
வேள்வியின் பயன் இவ்வளவு என நிச்சயமாக
அளவிட முடியாது. அது வந்த விருந்தினரின் பண்புடைமையைப் பொறுத்தது.
88. பரிந்தோம்பிப்
பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா
தார்.
பொருள்: விருந்தோம்பல் என்னும் வேள்வியில்
ஈடுபடாமல், நிலையில்லாத பொருட்செல்வத்தைப் பேணிப் பாதுகாத்துப் பின் இழப்பவர்கள், “வாழ்வின் பற்றுக்கோட்டை
இழந்துவிட்டோமே” என வருந்துவர்.
தொடை நயங்கள்: இணைமோனை, ஒரூஉ இயைப்உ.
89. உடைமையுள்
இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண்
உண்டு.
பொருள்: விருந்தோம்பல் என்னும்
பண்பில்லாதவர்கள் பெருஞ்செல்வம் உடையவர்களாக இருந்தாலும், அவர்கள் வறுமையில்
இருப்பவர்களே. அத்தகைய மனவறுமை பேதையர்களிடமே உண்டு.
தொடை நயம்: முரண்தொடை.
90. மோப்பக்
குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும்
விருந்து.
பொருள்: முகர்ந்து பார்த்தால் அனிச்சமலர் வாடிவிடும்.
அதுபோல,விருந்தினரை மாறுபட்ட முகத்துடன் நோக்கிக் கடுமை காட்டினால், அவர்களும் வருத்தம்
கொண்டு மனம் வாடிவிடுவர்.
குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.