541. ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்து
செய்வஃதே முறை.
பொருள்: நன்கு
ஆராய்ந்து, எந்தப் பக்கமும் சாயாமல், குற்றம் இன்னதென்றும், அதற்கான தண்டனைகள் இவை
எனவும் உரிய அறிஞரோடு ஆராய்ந்து நீதி செய்வதே செங்கோன்மையாகும்.
தொடைநயம்: அடி இயைபு.
542. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி
வாழுங் குடி.
பொருள்: உலக உயிர்கள்
அனைத்தும் வானத்திலிருந்து பெய்ய்உம் மழையை எதிர்பார்த்து உயிர்வாழும். அதுபோல,
மன்னனின் செங்கோலை நோக்கியே மக்களின் வாழ்வு அமையும்.
குறளில் எடுத்துக்காட்டு
உவமையணி பயின்று வந்துள்ளது.
தொடைநயம்: இணைமோனை,
அடி இயைபு.
543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது
மன்னவன் கோல்.
பொருள்: அந்தணர்களால்
போற்றி ஓதப்படும் மறைநூலுக்கும், அது வலியுறுத்தும் அறத்துக்கும் முதன்மையாய்
இருப்பது மன்னனின் முறைதவறாத செங்கோல்தான்.
தொடைநயம்:
மேல்க்கதுவாய் மோனை.
544.
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ
நிற்கும் உலகு.
பொருள்: தனது மக்களை
அரவணைத்து, நடுவுநிலைமை தவறாது ஆட்சி செய்கிற மன்னவனின் அடியைப் பின்பற்றி மக்கள்
நடப்பர்.
தழீஇ-இன்னிசை அளபெடை,
கோல்,
உலகு-ஆகுபெயர்கள்.
தொடைநயம்: அடி இயைபு.
545.
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும்
விளையுளும் தொக்கு.
பொருள்: நீதிமுறை
தவறாது, செங்கோன்மையுடன் ஆட்சிபுரியும் மன்னவனின் நாட்டில் மழையும் விளைச்சலும்
குன்றவே குன்றாது.
பெயல்-மழை.
தொடைநயம்: அடி எதுகை.
546.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங்
கோடா தெனின்.
பொருள்: ஒரு
மன்னனுக்கு வெற்றி தருவது அவன் கையிலிருக்கும் வேல் அல்ல. நீதிமுறை தவறாமல் ஆட்சி
செய்யும் செங்கோல்தான். அது எப்போதும் வளையாது இருக்க வேண்டும்.
வென்றி – வெற்றி,
கோடாது – வளையாது.
தொடைநயம்:
அடிமோனை/எதுகை.
547.
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும்
முட்டாச் செயின்.
பொருள்: மன்னன்
மக்களைக் காப்பான். மன்னவனை அவன் முறைதாழாது மேற்கொண்ட ஆட்சிமுறை காக்கும்.
தொடைநயம்:
மேல்க்கதுவாய் இயைபு, அடி எதுகை.
548.
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான்
தானே கெடும்.
பொருள்: அணுகுதலில்
எளிமையும், நீதி தவறாமல் ஆட்சி செய்வதுமே மன்னனுக்கு அழகு. இதிலிருந்து தவறும்
மன்னவனுடைய நாடு எதிரிகள் இல்லாமல் தானே அழியும்.
தொடைநயம்: அடி இயைபு.
549. குடிபுறங்
காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று
வேந்தன் தொழில்.
பொருள்: தன்னுடைய மக்களைப்பிறர்
வருத்த அனுமதிக்காமலும், தானும் அவர்களைவருத்தாமல் பேண வேண்டும். அதேசமயம், , அவர்களிடம்
குற்றம் கண்டவிடத்து, அவர்களைத் தண்டிப்பது அரசனுக்குக் குற்றமாகாது. அது அரசனது தொழில்.
வடு – குற்றம்.
தொடைநயம்: பொழிப்பு மோனை.
550.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட்
டதனொடு நேர்.
பொருள்: கொலை உள்ளிட்ட
குற்றங்களைச் செய்பவர்களுக்கு உரிய தண்டனைகள் வழங்குதல், பயிர்களிடையே வளர்கின்ற களைகளைப்
பறித்தலுக்கு ஒப்பானதாகும்.
குறளில் உவமையணி பயின்று
வந்துள்ளது.
பைங்கூழ் – பசும்பயிர்.
தொடைநயம்: இணைமோனை.