791. நாடாது
நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை
நட்பாள் பவர்க்கு.
பொருள்: ஒருவரை நட்பாகக்
கொண்டுவிட்டால், அந்த நட்பிலிருந்து அவ்வளவு எளிதில் விடுபட முடியாது. எனவே, ஒருவரைப்
பற்றி நன்கு ஆராயாமல் நட்புகொள்வது துன்பத்தைக் கொடுக்கும்.
தொடைநயம்: ஒரூஉ மோனை/எதுகை
792. ஆய்ந்தாய்ந்து
கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம்
தரும்.
பொருள்: மீண்டும் மீண்டும் ஆராய்ந்து பார்த்து,
ஒருவரோடு நாம் நட்புகொள்ளாவிட்டால், அந்த நட்பு நமக்கு சாகும் அளவு துன்பத்தையே தரும்.
கேண்மை – நட்பு
கடைமுறை – இறுதி
793. குணமும்
குடிமையும் குற்றமும் குன்றா
இனனும்
அறிந்தியாக்க நட்பு.
பொருள்: ஒருவருடைய பண்பு, நல்ல குடியில் பிறத்தல்,
செய்த பிழைகள், சுற்றத்தாரோடு நட்புறவாடல் போன்றவற்றை அறிந்துகொண்டு அவரோடு நட்புகொள்ள
வேண்டும்.
தொடைநயம்: முற்றுமோனை
794. குடிப்பிறந்து
தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும்
கொளல்வேண்டும் நட்பு.
பொருள்: நல்ல குடியில் பிறந்து, தன்னைப் பற்றிப்
பிறர் ஏதேனும் பழி சொல்லிவிடக்கூடாது என அச்சம் கொள்பவனை எவ்வகையிலும் நட்பாக்க வேண்டும்.
795. அழச்சொல்லி
அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு
ஆய்ந்து கொளல்.
பொருள்: நாம் கண்ணீர்விட்டு மனம் கசியும் அளவுக்கு
நம்மைத் திட்டி, நாம் செய்த குற்றத்தைச் சுட்டுபவர், நல்லவை அல்லாதவற்றை நமக்கு எடுத்துரைப்பவரின்
நட்பை ஆராய்ந்து தேர்ந்துகொள்ள வேண்டும்.
தொடைநயம்: இணைமோனை, ஒரூஉ எதுகை
796. கேட்டினும்
உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி
அளப்பதோர் கோல்.
பொருள்: துன்பமும் நமக்கு நன்மையானதே. காரணம்,
அந்தத் துன்பம்தான் நமக்கு உண்மையான நண்பர்கள் யார் என்பதை அளந்து சொல்லும் கோலாக இருக்கிறது.
கேடு என்பதைக் கோலாக உருவகித்த வள்ளுவர், நண்பரை
உருவகிக்கவில்லை. எனவே இக்குறளில் ஒருமருங்குருவக அணி பயின்று வந்துள்ளது.
தொடைநயம்: அடி எதுகை
கிளைஞர் – நண்பர்.
797. ஊதியம்
என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ
விடல்.
பொருள்: அறிவில்லாதவர்களின் நட்பைவிட்டு நீங்கிவிடுவது
ஒருவருக்கு நன்மை உண்டாக்கும்.
ஒரீஇ-இன்னிசை அளபெடை
பேதையார் – அறிவற்றவர்
கேண்மை – நட்பு
798. உள்ளற்க
உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண்
ஆற்றறுப்பார் நட்பு.
பொருள்: உள்ளத்தின் ஊக்கத்தைக் குறைக்கும் எண்ணங்களை
எப்போதும் எண்ணக்கூடாது. அதுபோல, துன்பத்தில் கைவிடுபவர்களின் நட்பை மீண்டும் கொள்ளக்கூடாது.
குறளில் எடுத்துக்காட்டு உவமையணி பயின்று வந்துள்ளது.
தொடைநயம்: இணைமோனை, கீழ்க்கதுவாய் எதுகை
799. கெடுங்காலைக்
கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும்
உள்ளஞ் சுடும்.
பொருள்: கேடு வந்தபோது கைவிட்டவரின் நட்பை,
இறக்கும் தருவாயில் நினைத்தாலும்அந்த நினைப்பு உள்ளத்தைத் தீயெனச் சுடும்.
அடுங்காலை – சாகும் தருணம்
தொடைநயம்: பொழிப்பு மோனை, ஒரூஉ இயைபு
800. மருவுக
மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும்
ஒருவுக
ஒப்பிலார் நட்பு.
பொருள்: குற்றமற்றவர்களின் நட்பைப் பற்றிக்கொள்ள
வேண்டும். தனக்கு ஒப்பில்லாத தகுதியற்றவர்களின் நட்பை அவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்தேனும்
விட்டுவிடுதல் வேண்டும்.
மாசற்றார் – குற்றமற்றவர்
தொடைநயம்: இணைமோனை, அடி எதுகை.